Powered By Blogger

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

உழைப்பின் ஓசை


நடைமேடையோர ஆர்மோனியப் பாடலை
நசுக்கிச் செல்லும் ரயில் சத்தமென
வாழ்வின்  சோகராகங்களைச்
சாப்பிட்டுப் போகட்டும்
உழைப்பின் பேரிரைச்சல்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

ஆயுதன்


ஆழ்மனக்கடலில் 
அடிக்கடி  நீந்து
மௌனம் உன்னோடு நீயே 
பேசிடும்  உள்மொழி 

உன்னை நீயே
குறைத்துக் கொள்ளாதே
வெற்று பிம்பங்களால்
நிறைத்துக் கொள்ளாதே

சரியாக செய்தால்
பன்றி மேய்த்தல்
கார்ப்பரேட் தொழிலே

நீ 
ஆற்றில் எறியப்படுவது 
நீச்சல் பழக
ரோட்டில் எறியப்படுவது 
ஓட்டம் பழக 

நீ 
எல்லையற்றவன்
வேலிகளை வெட்டியெறி
நீ
ஏதுமற்றவன்
கவலைகளை விட்டு ஒழி

நீ சக்தி பெற்றவன்
சாதிக்க காட்டு வெறி

கனவுகளை
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு
அழிக்காதே
செந்நீர் விட்டு செந்நீர் விட்டு
சிறப்பாக வளர்த்தெடு

நூறாண்டு மரங்களை
முறித்துப்போடும் புயல் காற்றால்
ஒருநாணலைக்கூட 
ஒடிக்க முடியாது 

பணி பயந்துவிடாதே 
குனி படுத்துவிடாதே

உள்ளம் என்பதை
உலர்த்திக் கொண்டேயிரு
ஈரப்பதத்தில் பூஞ்சைகள் 
முளைக்கும்

காலம் உன்னை காயப்படுத்தும்
காயங்கள் உன்னை ஆழப்படுத்தும்

மூச்சிருக்கும்வரை என்பது
உடலுக்கு மட்டும்தான்- உலகில்
பேச்சிருக்கும்வரை உன்
பேரிருக்கும்
புகழ்வெளி புகு 

துல்லியமாகக் கணக்கிடும்
துல்லியமாகக் செயல்படும்
கணிப்பொறி நீ

ஏவுகணைகள் தாங்கிய
ஆயுதன் நீ
ஏமாற்றங்கள் தாங்கிட
நடுக்கம் ஏன்

அடிக்கடி வளையும்
நதிகள்
அதிக தூரம் பயணிக்கும்

நட்பை வீணாக்காதே
நட்பால் வீணாகாதே

பொருளை வைத்து
மனிதரை மதிப்பிடாதே

வானிலை
வாழ்நிலை
இரண்டும் ஒன்றுதான்
எப்போதும் மாறக்கூடும்

நிலையற்றவை எல்லாம்
எனினும்
நிலையானவன் நீயென நம்பு
நிலைகுலையா நெஞ்சம் கொள்

எதிர்கொள்ள துணிவிருந்தால்
எதிர்ப்பைப் பற்றி அச்சமில்லை
எதற்கென பணிந்துவிட்டால்
எதுவும் இங்கே மிச்சமில்லை

துணிந்து நில்



செவ்வாய், 11 செப்டம்பர், 2018

பாரதியார்



காக்கைச் சிறகிற்கும் 
கவிதை நிறம் தீட்டியவன்

காற்று வெளியிடையில்
காதல் ரசம் பூசியவன்

சாதிச் செருக்கின்
முகத்தில் கரி பூசியவன்

நீதி உயர்ந்த மதிப்
பேரொளி வீசியவன்

அச்சத்தை துச்சமென
தூசியென ஏசியவன்

உச்சத்தில் தமிழ்மொழியை
ஏற்றி வைத்துப் பேசியவன்

விடுதலையை உயிர் மூச்சாய் 
பெருங்குரலில் பாடியவன்

கொடும்வறுமை பெரும்பேயை
கடுஞ்சொல்லில் சாடியவன்

ஆங்கொரு காட்டின் 
அக்கினிக்குஞ்சு - அவன்

மானுடம் காக்கத்
துடித்தவோர் நெஞ்சு.

சனி, 8 செப்டம்பர், 2018

அச்சமின்றி திரி


நாலுசுவர் என்பது சிறைச்சாலை வெளியே வா
நடுரோடும் பாடசாலை
மனிதர்கள் உலவும்பாடங்கள்

பேசாமலே வளரும்பகைமை
பேச்சினால் உடைப்போம் சுவரை

சிகை பகை 
அடிக்கடி சரிசெய்

தன்னை நம்பாமல்
தன்னை நம்புபவனை
நம்பாது கடவுள்

தொலைவில் புள்ளியாய் தெரியும்
ஒற்றை வெளிச்சம் அருகே செல்லச்செல்ல ஓங்கிவளரும்

தொலைவை குறைத்துவிடு
துயரம் தொலைத்துவிடு

விடாமல் பெய்கிற 
அடைமழை -முயற்சி

அடர்ந்த காட்டில் உலவும்
கொடிய மிருகங்கள்கண்டதுண்டா  
அவைமனதில்  உலவும்
கெட்டகுணங்களின் 
உயிர்வடிவங்கள்

தீய பழக்கங்களைக் கொன்றுவிடு
இன்றேல்  அவைஉன்னை தின்றுவிடும்

போதைக்கு முதல் பலி 
மரியாதை - உன்னை நீயே சிறுமைப்படுத்த ஊற்றிக்குடி

தனிமை உன்னை
தனிமைப்படுத்தி விடும்
கூடுமானவரை கூடிப்பழகு

காட்டுவெள்ளமும்
உணர்ச்சி வெள்ளமும்
பாதுகாப்பானவை அல்ல

நெற்றியில் நீர் வெகுமானம்
கண்களில் நீர் அவமானம்

வண்டியைவிட   சைக்கிளை நம்பு
சைக்கிளைவிட  கால்களை நம்பு

காற்றுக்கு சிறகுகள் தேவையில்லை
அறிவுக்கு அறிவுரைதேவையில்லை

காலை எழுந்தவுடன் தண்ணீரில் குளி
மாலை வரும்வரை வேர்வையில் குளி

ஊமையை பேசவைக்க வேண்டாம்
சிந்திக்க வைத்தாலே போதும்

முடிந்தவரை உண்மைபேசு 
முடியாதபொழுதில் ஊமையாகு

யாரும் இங்கே நல்லவனில்லை
அதனால் நீயும் கெட்டவனில்லை

அடிக்கடி உன்னைநீயே
ஆராய்ந்துகொள்

நீ எனும் நீரில் எத்தனை கிருமிகள்
உன் ஆய்வுக்கூடம் அறிந்து சொல்லட்டும் 
ஆகாதவை அகற்ற மருந்து கொள்ளட்டும்

இறகுகள் உதிர்வதால்பறவைக்கு சேதமில்லை
இழப்புகள் நேர்வதால்உழைப்புக்கும் ஊனமில்லை

அடக்கம் கீழிருந்து மேல்
ஆணவம் மேலிருந்து கீழ்

மேடை கிடைத்தால் பேசு
பேனா கிடைத்தால் எழுது
புத்தகம் கிடைத்தால் வாசி
மெத்தை கிடைத்தால் தூங்காதே

அடுத்த  கணமே 
அழியும் உலகம் என்றாலும் 
அச்சமின்றி திரி
ஆலையில் பிழியப்படும்
கரும்பும் உழைப்பும் 
கலந்தே இனிக்கிறது .

பாயும் நதி

அனுதினம் எண்ணம் பின்னால் இழுக்கும் 
தனுவெனும் செயலே வீச்சு.  


ஆயிரம் தடைகள் அணையினை போடும்
பாயும் நதியே உடை. 


இளமைப் புரவி விரைந்திடும் வேகம்
வளமை பெறவே உழை. 


ஈடில்லை எவரும் என்றெண்ணு என்றாலும்
கேடில்லா கருவம் கொள். 


உதைத்தால் அழவா பிறந்தாய் உலகம்
உதைத்தால் அதையே உதை. 


ஊமைக் கனவும் ஒருநாள் கதைக்கும்
சாமைக் கதிராகச் சிரி. 


எரியும் நெருப்பை காற்றே 
பெருக்கும்
கனன்று கனன்று எழு


ஏக்கம் தயக்கம் மனதில்
அகற்று
ஏந்தித் திரிவாய் இலக்கு


ஒடுங்கியே கிடந்தால் ஓய்வும் சலிப்பு
வெடுக்கென எழுவாய் சிறப்பு.