ஓட்டப்பிடாரம் பிறந்த
தமிழ் நிலத்தின் பெருமகன்
வலுவிழந்த மக்களுக்காக
வழக்கு மன்றம் அதிர அதிர
வாதாடிய சட்ட நாயகன்
உள்ள சொத்தையெல்லாம்
இல்லாதவருக்கு
அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு
இறைவனான மாமனிதன்
துன்பத்தில் துடித்த தொழிலாளர்
துயர் துடைக்க
தமிழகத்திலேயே ஏன்
இந்தியாவிலேயே
முதல் தொழிலாளர் போராட்டம்
முன்னெடுத்து வென்றெடுத்த
உரிமை காத்த மாவீரன்.
பாட்டுக்கு ஒரு பாரதி எனில்
பேச்சுக்கு ஒரு வ.உ.சி என
செத்த பிணம் பிழைத்து எழ
பெருந்தமிழாய் முழங்கியவன்.
தாய்த் தமிழைப்
போற்றி வளர்த்த
தன்னிகரில்லா தமிழறிஞனே
தொல்காப்பியத்தை
திருவள்ளுவத்தை
பதிப்பித்து புதுப்பித்த
செழுந்தமிழ் சேவகனே
பாடற்றிரட்டு எனும்
தமிழிலக்கிய தேன் சிந்தும்
கவிதை பாடிய மகா கவிஞனே
எத்தனை நூல்கள் யாத்தளித்தாய்
அத்தனை நூலிலும்
தமிழ்த் தேன் வடித்தாய்!
தமிழகம் கண்ட
தற்சார்பு பொருளதாரத்தின்
தந்தை
உலகாண்ட வெள்ளையனும்
கண்டு மிரண்ட சிந்தை
முடியாது என நினைத்ததை
முடித்துக் காட்டிய விந்தை
கப்பலோட்டிய பெருந்தமிழனே
வீரவணக்கம்!
மாடு இழுக்க மறுத்த செக்கையும்
தான் இழுத்து சிலிர்த்த சிங்கமே
விடுதலை வேட்கையின்
வெப்பம் கூட்டிய
தெற்கிலிருந்து எழுந்த பெருந்தீயே!
அணையாது எரியும்
ஒவ்வொரு தமிழனின் நெஞ்சினிலும்
ஆற்றலோடு நீ ஏற்றிய
அறிவுச் சுடர்!