சாதிப் பாம்பு சுற்றிக் கிடந்த
சமுதாயம்
அனைவருக்கும் இருக்கவில்லை
சம நியாயம்
கீழென்றும் மேலென்றும்
சொல்லி வைத்தான்
தொட்டாலும் தீட்டென்று
தள்ளி வைத்தான்.
பொதுத்தெருவில் நடமாட
பொதுக் கிணற்றில் நீரெடுக்க
ஒடுக்கப்பட்டு ஒரு மக்கள்
தடுக்கப்பட
அப்போது ஒரு தலைவன்
வந்துதித்தான்
தீண்டாமை பெருங்கேட்டைச்
சுட்டெரித்தான்
வான்பொழிந்த நீரெடுக்க
எவர் தர வேண்டும் அனுமதி
பூ நிலத்தில் நாம் நடக்க
எவரிடம் பெற வேண்டும் அனுமதி
சட்டமன்றம் கதிகலங்க
தமிழ்த்தலைவன் இடிமுழங்க
யாவரும் எங்கும் செல்லலாம்
எவரும் எங்கும் நீர் அள்ளலாம்
ஆட்சிமன்றம் ஏற்றது அவன்
தீர்மானம்
மானுடத்தை காத்தது அவன்
தன்மானம்.
லண்டன் வட்டமேசை மாநாட்டில்
அம்பேத்கருடன் ஒலித்த
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல்
தமிழ் நிலத்தில் களை களைய
சமுதாய சீர்திருத்த
விதைவிதைத்த முதற்குரல்
தனிமனித புரட்சியின்
தன்னிகரில்லா அடையாளம்
இழிவுச்சொல்லை
எழுச்சிச் சொல்லாய்
மாற்றிக் காட்டிய இனமானம்!